Wednesday, May 15, 2013

நான் ஏன் அண்ணன் திருமாவை ஆதரிக்கிறேன் ?

என் தாயாரின் மறைவு செய்தியைத் தாங்கி, மீளாத் துயரில் நான் தமிழகம் வந்து இரு நாட்கள் ஆகியிருந்தன . மனதில் அம்மாவின் நினைவுகளே மேலெழுந்து நின்றன. அப்பாவின் உறவினர்கள் , ஊர்காரர்கள் என பலர் குழுமி என் அம்மாவின் மரண செய்தியைக் காட்டிலும் முக்கியமான ஒரு செய்தியை விவாதித்துக் கொண்டிருந்தனர். நான் நாட்டம் கொள்ளவிடிலும் அச்செய்தி என் செவிப்பறைகளை அறையவே செய்தது.

எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று மற்ற சாதியினரால் அழைக்கப்படும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் இறந்துவிட்டார் எனவும் அவ்வுடலை மற்ற சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே (காரில்) கொண்டு சென்றதற்காக அங்கே கூடியிருந்தவர்கள் காலனி தெருவில் சென்று செய்த பிரச்சனையைப் பற்றி மார்தட்டிக் கொண்டிருந்தார்கள். என் அம்மாவின் காரியம் முடிந்த பிறகு வேறு சில வழிகளில் அவர்களுக்குப் பிரச்னை கொடுக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு நாளுக்கு நாள் திமிர் அதிகமாகிவிட்டதாகவும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

பெருநகரங்களில், நகரங்களில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் பெரிய இடர்பாடுகள் இருப்பதில்லை ஆனால், கிராமங்களில் இந்தப் பிரச்னை இன்னும் தன்னுடைய கோரப்பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஒரு சில வினாடிகள் என் அம்மாவை , அந்த இறந்த முதியவரின் நிலையில் வைத்துப் பார்த்தேன். மனம் கனத்தது. ஒரு வேலை நானும் அந்த சமூகத்தில் பிறந்து என் அம்மாவை பொதுவான பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் இருந்திருந்தால் என் மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும் . ஆனால் காலனியில் கலவரம் செய்யச் சென்ற மனிதர்கள் எவரும் அதனை சிந்தித்துப் பார்க்கவில்லை.

இரண்டொரு நாட்கள் கழித்து அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அப்பிரச்சனை என்னவானது என்று கேட்டேன் "எங்க தம்பி, இந்த கம்முனாட்டிங்கல எவனோ விடுதலைச் சிறுத்தைகளில் பொறுப்புல இருக்கானாம் , அவன் நாளைக்கு எதாவது பிரச்னை நடந்தா திருமாவளவனை அழைத்து வருவேன்னு மிரட்டுறான் தம்பி. அதான் விட்டாச்சுன்னு " சொன்னாரு.



அப்ப யோசிச்சேன், திருமா மாதிரி ஒரு வலிமை மிக்கத் தலைவர் அச்சமூகத்திற்கு வாய்க்காவிடில், அச்சமூகத்தை யார் காப்பாத்தியிருக்க முடியுமென்று.

என்னுடைய மிக நெருங்கிய நண்பர் நான் அண்ணன் திருமாவை ஆதரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து என்னுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நான் அவரிடம் ஒன்றே ஒன்று தான் கேட்டேன், "உங்கள் நண்பர்களில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கூறப்படுகிற ஜாதியில் உள்ள நண்பர்கள் எத்தன பேரு" ன்னு. யாருமில்லைன்னு சொன்னார்.

நம்முடன் பழகும் பலர் தன்னுடைய தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கூறப்படுகிற சாதியை மறைத்தே சொல்கிறார்கள், அவர்கள் படும் வேதனை அப்படி. "இட ஒதுக்கீட்டில் படித்தவன் (இத பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் படிச்சவன் சொல்லுவான் ) " , "உங்களால தான் மெரிட்க்கு வேல்யு இல்லாமப் போச்சுன்னு " எவ்வளவு பேச்சு. இந்த அமிலச் சொற்களுக்காகவே நம் நண்பர்கள் பலர் சாதியைச் சொல்லவதில்லை.

தருமபுரி கலவரம் மட்டுமே நமக்கு மிகப் பெரும் கொடுமையாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் தங்களுடைய தினசரி வாழ்வில் படும் துன்பங்கள் சொல்லி மாளாது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் கூட படித்த நண்பன் எங்கள் வீட்டில் கிரிக்கெட் பார்க்க வந்தான். அப்போது அவனிடம் எங்க பாட்டி அவன் வூரு என்ன என்று கேட்டது. அவன் ஊரு பேரை சொன்னதும் எங்க பாட்டி "________ யா????” ன்னு ஒரு இழுவ இழுத்துச்சு. ரொம்ப நல்லா போய் கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டைக் கூடப் பார்க்காமல் அவன் வீட்டை விட்டு வெளியேறினான். அடுத்த இரண்டாண்டுகள் என்கூடப் படித்தும் என் வீட்டிற்கு ஒரு முறைக் கூட வரவில்லை.

அவர்களின் வேதனையை அவர்களால் மட்டுமே உணர முடியும். அவர்கள் அரசியலை அவர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள் . அவர்களின் அரசியலில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவரோ அவரது இயக்கமோ அம்மக்களை கைவிட்டாலொழிய அவரை விமர்சனம் செய்யும் தகுதி எவருக்கும் இருக்க முடியாது. அண்ணன் திருமா அவர்கள் 2009 இல் கலைஞரோடு இருந்தார், ராஜபக்சே அவர்களுடன் கை கோர்த்தார் என்று உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக அவரை விமர்சனம் செய்யும் தகுதி எவருக்கும் இருக்க முடியாது. காரணங்களைச் சொல்லாதீர்கள். ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் எனச் சொல்லப் படுபவர்கள் அத் துன்பச் சிறையிலிருந்து மீள்வார்கள் என்று கூறுங்கள், அண்ணன் திருமாவை தலித் பிரச்சனையைத் தூக்கியெரிந்து விட்டு பதவிக்கு வர விருப்பமில்லா முழுநேர ஈழ அரசியல் செய்யச் சொல்வோம்.

பா.ம.க. வின் செயற்பாடுகளுக்கு அண்ணன் திருமா அவர்கள் நடந்து கொண்ட விதமே அவரை பலமடங்கு உயர்த்தி விட்டது. அதில் கூட சிலர் திரு. ராமதாஸ் அவர்களிடம் அண்ணன் திருமா அவர்கள் மலிந்து போவதாக குற்றம் சாட்டினர். திருமா அண்ணன் நினைத்தால் விழியசைவில் ஊரைக் கொளுத்த முடியும், முடியும் தருவாயிலும் அமைதியாக இருப்பதே வீரம். ஹில்லரி கிளின்டனிடம் போனில் பேசுவதல்ல.

அண்ணன் திருமா போன்ற தலித் தலைவர்கள் வலிமையாகவும் , அரசியல் அதிகாரத்துடனும் இருக்கும்வரையில் தான் அம்மக்களுக்குப் பாதுகாப்பு என்பது உறுதி. பாதுகாப்பில் அவர்களை இருத்திக்கொண்டு தான் நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டுமே வொழிய, உன்னுடைய அரசியலை விட்டுவிட்டுவா , நாம் அனைவரும் ஒன்றிணைத்து நமது போராட்டத்தை முன்னெடுப்போம் என்பது வெட்டிவேலை. “ நமது போராட்டம்” என்பதில் அவர்களின் போராட்டத்திற்கு கொடுக்கப்படும் முன்னுரிமை என்ன ? சாதியடுக்குடன் கூடிய தமிழ்த் தேசியம் அமைந்தால் , அது சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் வாங்கும் செருப்படி இன்று தமிழர்களிடம் இந்திய தேசியம் வாங்கும் செருப்படியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.

அண்ணன் திருமா அவர்கள் கலைஞரோடு இருந்தாலும், ஜெயலலிதாவோடு இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டும் , வலிமையோடு இருக்கவேண்டும். இருந்தால் தான் சில மிருகங்களிடமிருந்து பலரை காக்க இயலும்.

Wednesday, April 24, 2013

Jurassic Park to Jurassic Park 3D 1993 முதல் 2013 வரை

கடந்த இருபது நாட்களாக Jurassic Park 3D படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். நேற்று தான் பார்க்க நேர்ந்தது. அதுவும் Oblivion வெளியான காரணத்தினால் IMAX இல் பார்க்கலாம் என்ற ஆசை தகர்ந்து சாதாரண திரையரங்கில் தான் பார்த்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போதும், வந்து படுக்கையில் கிடந்திருந்த போதும் எண்ணம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. இருபது ஆண்டுகளுக்கு முன் 1993 - 94 இல் வாசு ஏ/சி யில் இந்தப் படம் வெளியான போது நான் சிறியமலர் மேனிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். Science Fiction என்ற பெயரில் கும்பகோணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மதியக் காட்சிக்கான டிக்கெட்களை வாசு திரையரங்கம் விற்றுக் கொண்டிருந்தது. தமிழக அரசின் பாடத்திட்டத்தில் அன்று Science Fiction என்றாலும் எங்களுக்கு என்னவென்று தெரியாது டைனோசர் என்றாலும் என்னவென்று தெரியாது. படத்தின் சுவரொட்டிகளைப் பார்த்து டைனோசர் அப்படித்தான் இருக்கும் என்று என்னைப் போன்ற ஒரு சிலருக்கு எண்ணமிருந்தாலும் , பெரிய காண்டாமிருகம் போலிருக்கும் என்று சொல்லித்தான் பலரை படத்துக்கே அழைத்துச் சென்றனர்.

ஒட்டுமொத்த பள்ளியே அந்தப் படத்திற்குப் போனாலும் , நான் அந்தப் படத்திற்கு வீட்ல அனுமதி வாங்கறதுக்குள்ள கிட்டத்தட்ட செத்துப்போயிட்டேன். படம் பார்த்தால் பையன் கெட்டுப் போயிடுவான், கையில காசு கொடுத்தா பையன் கெட்டுப் போயிடுவான் போன்ற பலப்பல புரிதல்கள் எங்க அப்பாவுக்கு உண்டு. Steven Spielberg இன் இன்னொரு படமான ET படத்துக்கு எங்கள் வீட்டின் அருகிலுள்ள நண்பர்கள் அழைக்க, அந்த நண்பர்களின் அம்மாக்கள் என் அம்மாவிடம் எடுத்துச் சொல்லியும், என்னால் போக முடியவில்லை. அதற்கு என் அம்மா என் அப்பா சொன்னக் காரணமாக மற்றவர்களிடம் கூறியது "
அந்தப் படத்துக்கு கூட்டம் அதிகமா இருக்காம், வாசக்கதவு வரைக்கும் சைக்கிள் நிக்குதாம், இங்கிலீஷ் படம் அசிங்கமான படமா இல்லாட்டி இவ்வளவு கூட்டம் நம்மவூருல ஏன் வருதுன்னு" . எனக்கு இதைக் கேட்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை , பசங்க வீட்டுக்குத் தெரியாம படத்துக்குப் போறது அன்றைய காலகட்டத்தில் பெரிய கெட்டப்பழக்கம், அதற்கான காரணம் இந்த மாதிரி தவறான புரிதல்களே என்ற புரிதல் அன்று வந்தது. அப்புறம் என்னோட கடைசி சித்தப்பா , Jurassic Park நல்ல படம்தான், ஏதோ விலங்கை வச்சு எடுத்திருக்கனாம் என்று சொன்னவுடன் காசு கொடுத்தார்கள். நானும் படத்துக்குப் போனேன். என்னுடைய 23 ஆம் வயது வரை நான் பார்த்த ஒரே ஆங்கில / வெளிநாட்டுப் படம் அது தான்.

2006 இல் ஆனந்த விகடனில் திரு.செழியன் எழுதிய "உலக சினிமா" தொடரை படிக்க ஆரம்பித்ததும் வெளிநாடுகளின் திரைப்படங்களின் மீதான ஒரு பார்வையும் உணர்வும் ஏற்பட்டது. அத் தொடரில் வெளியான "Children of Heaven" என்ற ஈரானியப் படத்தைப் பற்றி படித்தேன். மணி கூறியப் பிறகு பர்மா பஜார் சென்று அந்தத் திரைப்படத்தை வாங்கி வந்தேன். திரைப்படங்களின் மீதான என்னுடைய கண்ணோட்டம் மாறுவதற்கு காரணமான முதல் படம் "Children of Heaven" . எங்களுடன் கல்லூரியில் படித்த, மணியின் நெருங்கிய நண்பனான சதீஷ் சொன்னதற்காக "Malena" (“Cinema Paradiso” படத்தினை இயக்கிய Giuseppe Tornatore இயக்கிய மற்றொரு படம்) படத்தைப் பார்த்தேன். நம்ம வூரு நடிகைகள் சொல்லும் "படத்துக்குத் தேவையான கவர்ச்சி" என்று விடும் பீலாவின் உண்மையான பொருள் அந்தப் படத்திலிருந்து தான் புரிந்து கொண்டேன். இந்த இருபடங்களும் தான் என்னுடைய உலக சினிமா காதலுக்கு Launch Pad ஆக அமைந்தது.

நான் வேலைக்குச் சேர்ந்து இரு ஆண்டுகளில் அமெரிக்கா வரவேண்டிய காலகட்டமும் இதுவே. அமெரிக்கா வந்த பிறகு , விகாஸ் சிங், விகாஸ் போன்றவர்களின் நட்பால் வெளிநாட்டுத் திரைப்படங்களை தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். Netflix மிகப் பெரும் உதவியாக இருந்தது. இதே காலகட்டத்தில் "சிறிது வெளிச்சம்" என்ற பெயரில் திரு. எஸ். ரா அவர்கள் ஆனந்த விகடனில் தொடர் எழுத; பிரபலமில்லாத ஆனால் மிகச் சிறந்த உலகத் திரைப்படங்கள் அறிமுகமாயின.



உலகத் திரைப்படங்களின் காதலானாகவும், அதனைத் தேடித் தேடிச் சுவைக்கும் மனப்பான்மையும் கடந்த ஏழு ஆண்டுகளின் என்னுள் தீவிரமாக வளர்ந்துவிட்டாலும், 1993-1994இல் Jurassic Park படத்திற்கு போராடி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து சென்றது உள்ளுக்குள் ஒரு நகைப்பை ஏற்படுத்தவே செய்கிறது.