Monday, November 19, 2012

Caterpillar (2010) - ஜப்பான் திரைப்படம்






நேற்று Caterpillar (2010) என்றொரு ஜப்பானியப் படம் பார்த்தேன். நான் பெரிதும் விரும்பும் எழுத்தாளர் திரு.எஸ். இராமகிருஷ்ணன் அவர்களின் பரிந்துரையின் பெயரில் இப்படத்தைப் பார்த்தேன்.

போரின் கொடூரங்களையும், மனித மனங்களையும் ஒருங்கே இப்படம் சித்தரிக்கிறது. இரண்டாம் Sino- Japanese போர் முடிந்து ஒரு போர்வீரனை இராணுவத்தினர் அவனது இல்லத்திற்கு கொண்டுவருகின்றனர். போரில் அவன் தனது இரண்டு கைகளையும், கால்களையும் இழந்து ஒரு Torsoவாக மாறியிருக்கிறான் . அவனது பெற்றோர் அவனை கைவிட்டக் காரணத்தினால் , அவனைப் பராமரிக்கும் பொறுப்பு அவனது மனைவியிடம் வந்து சேருகிறது. அவன் அந்த நிலையில் ஏன் திரும்பி வந்தான் என்று அவள் ஆற்றாமையில் அழுகிறாள். அவனை அந்த நிலைமையில் அவள் வெறுத்தாலும் ; தனது கடமை என்றுக் கருதி அவனைப் பராமரிக்கிறாள்.

அவனுக்கு கட்டுக்கடங்காப்பசியும், காமமும் இருந்து கொண்டேயிருக்கிறது . ஒருவிதமான அருவருப்புடனே அவனது காமத்தினையும் , அவனது பசியை போக்குவது போலவே அவன் மனைவி போக்குகிறாள். சில நேரங்களில் அவனது கோபத்தினை வெளிப்படுத்த அவளது மீது காரி உமிழ்கிறான் அந்தப் போர்வீரன். போருக்கு முந்தைய காலத்தில் , அவன் தன்னை கொடுமைப்படுத்தியதைச் சொல்லி அழுகிறாள் அவன் மனைவி. இதே நேரத்தில், அந்த ஊரே அவனை மிகப் பெரும் போர்க் கடவுளாகக் கொண்டாடி மகிழ்கிறது. அவனைப் பராமரிப்பதால் அவன் மனைவி மிகப்பெரும் சேவையயை அந்நாட்டிற்கு செய்வதாகப் புகழ்கிறார்கள். அனால் தன்னுடைய கணவனின் நிலைமையையும், அவனைப் பராமரிக்கத் தான் படும் துன்பத்தினையும் அவள் நினைத்து அழுகிறாள். போர்க் கடவுளாகப் போற்றப்படும் அவன் உயிருடன் இருக்கும் ஒரு பிணம் என்பதனை உணர்த்த, அவனை தினமும் இராணுவ உடையில் அலங்கரித்து, ஒரு கைவண்டியில் வைத்து தான் வேலை செய்யும் வயலுக்கு அழைத்து வருகிறாள். அனைவரும் அவனைப் போர்க்கடவுளாகப் போற்றுகிறார்களே யன்றி அவனது துன்பத்தினையோ அவனது மனைவின் துன்பத்தினையோ உணரவில்லை.

அவன் போரில் வாங்கியப் பதக்கங்களே அவனை பார்த்து கேலிசெய்வது போல் உணர்கிறான்.அவனது ஆற்றாமை அவனைத் தற்கொலை செய்துகொள்ள தூண்டுகிறது. ஒரு நத்தையைப் போல் ஊர்ந்து சென்று,அவனது இல்லத்தின் முன் உள்ள ஒரு குளத்தில் விழுந்து இறக்கிறான். அதே வேளையில், அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசுவாதால், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வருகிறது. ஊரில் ஒருவன் போர் முடிந்ததாக மகிழ்ச்சியுடன் ஓடிவருகிறான். அவ்வாறு ஓடி வருபவனை படம் முழுக்க ஒரு பைத்தியக்காரனாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். படம் நிறைவடைகிறது. ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியில் இறந்தவர்களின் எண்ணிக்கை திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நவம்பர் மாதம், மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களின் தியாகத்தையும், வீரத்தினையும் போற்றும் அதே நேரத்தில், புலத்தில், கை கால்களை இழந்து, வாழ்கையில் அல்லலுறும் போராளிகளை இப்படம் பார்க்கும் போது மனம் நினைத்துப் பார்க்கிறது. மிகக் கடுமையாக போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களினையும், போராளிகளையும் இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுப்பதே தலையாயக் கடமை, அதன் பிறகே மற்றவை அனைத்தும் என்று நான் வெகு நாட்களாகவே கருதி வருகிறேன். ஐ.நா முன், உலக நாடுகள் முன் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த நினைக்கும் அதே வேளையில், மேற்கூறிய போராளிகளைப் பற்றியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதை விடுத்து ஐந்தாம் கட்டப் போர் விரைவில் வெடிக்கும் என்று பேசுவதைக் கேட்கும் போது ; ஒரு மனிதனாக மனதிற்கு வேதனையைத் தருகிறது.